Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

கலைஞானியும் இசைஞானியும்

கலைஞானி கமலும் இசைஞானி இளையராஜாவும் தமிழ்சினிமாவின் இரண்டு மிகப்பெரிய சாதனையாளர்கள். இவர்களின் கொள்கைகள் வேறுபட்டாலும் இசை என்றபாலம் இவர்களை இன்றும் இணைத்தே வைத்திருக்கின்றது. கமல் 58ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த காலத்தில் பெரும்பாலும் கமலின் படங்களுக்கு இசைத் தாலாட்டுச் செய்தவர் இளையராஜா. அத்துட‌ன் க‌ம‌லைப் பெரும்பாலும் தான் இசை அமைத்த‌ ப‌ட‌ங்க‌ளில் பாட‌வும் செய்திருப்பார் இசைஞானி.

பதினாறு வயதினிலே பட்டிதொட்டி எங்கும் கமல்,ரஜனி, பாரதிராஜா, ஸ்ரீதேவி, இளையராஜா என பலரின் முகவரிகளை வெளிஉலகிற்க்கு எடுத்துச் சென்றபடம். அதன்பின்னர் பாரதிராஜா இளையராஜா கமல் கூட்டணியில் சிவப்புரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி, டிக்.டிக்.டிக், உல்லாச பறவைகள் என ஹிட் கொடுத்தார்கள் இருவரும். குறிப்பாக உல்லாசப் பறவைகளில் " நினைவே ஒரு பறவை" பாடலும் காட்சி அமைப்பும் அருமையாக இருக்கும். டிக்டிக்டிக் படத்தின் பின்னணி இசையில் ஞானி தன் கைவண்ணத்தைக் காட்டியிருப்பார். மீண்டும் பாரதிராஜா இளையராஜா கமல் கூட்டணியில் ஒரு படம் வெளிவராதா என ஏங்கிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

அடுத்தது கே.பாலசந்தர் இளையராஜா கமல் கூட்டணியில் புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி இர‌ண்டும் இசையை மைய‌மாக‌ வைத்து எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ள் புன்ன‌கை ம‌ன்ன‌னில் மேல்நாட்டு இசையும், உன்னால் முடியும் த‌ம்பியில் க‌ர்னாட‌க‌ இசையும் கலந்து ஞானி க‌ல‌க்கியிருப்பார். இதில் புன்ன‌கைம‌ன்ன‌னில் முத‌ல் முத‌லில் க‌ம்யூட்டர்மூலம் இசையை அறிமுக‌ப்ப‌டித்தியிருப்பார். புன்ன‌கை ம‌ன்ன‌ன் பின்ன‌ணி இசை ம‌ற்றும் அத‌ன் தீம் மியூசிக் இசைஞானியின் பேரைச் சொல்லும் இசைக்குறிப்புக‌ள்(கானாப் பிர‌பா ஒருமுறை இத‌ன் இசை வ‌டிவ‌ங்க‌ளை த‌ன் வ‌லையில் ப‌திவு செய்திருன்தார்).

அடுத்து பாலுமகேந்திரா கமல் கூட்டணியில் மூன்றாம் பிறை கமலுக்கு இரண்டாம் தடவை தேசியவிருது வாங்கித்தந்த படம்(முதல் படம் களத்தூர் கண்ணம்மா சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கு தேசியவிருது). இதில் இடம் பெற்ற "கண்ணே கலைமானே" பாடல் கவிஅரசர் கண்ணதாசனின் இறுதிப்பாடலாகும், கேஜே ஜேசுதாசின் குரலும் கமல ஸ்ரீதேவியின் நடிப்பும் இசைஞானியின் தாலாட்டு இசையும் இந்தப்பாடலை எவர்கிரீன் பாடலாக இன்றைக்கும் நினைக்கவைக்கும். பின்னர் பாலுமகேந்திராவுடன் மீண்டும் கோகிலா, சதிலீலாவதி போன்ற படங்களில் கமல் இளையராஜா இசைக்கூட்டணி தொடர்ந்தது. சதிலீலாவதியில் மாறுகோ மாறுகோ பாடலை கலைஞானி கமலே பாடினார். இந்தப்பாடலில் பல சினிமாப்படங்களின் பெயர்களை இணைத்து கவிஞர் வாலி அழகாக எழுதியிருப்பார்.

எஸ்பிமுத்துராமன் கமல் இளையராஜா கூட்டணியில் பல படங்கள் வெளிவந்தன. அனைத்துப்படங்களிலும் இசையும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

நாயகன் கமலை உலகநாயகனாக உயர்த்திய படம். இந்தப்படத்தின் "தென்பாண்டிச்சீமையிலே" என்றபாடலை கமல், இசைஞானி இருவரும் பாடியிருப்பார்கள். இதன் பின்னணி இசையிலும் ராஜா தன் கைவரிசையைக் காட்டியிருப்பார். நாயகனின் வெற்றிக்கு இளையராஜாவும் ஒரு காரணம் என்பதை மறக்கமுடியாது.

ராஜ்கமல் பிலிம்ஸ் அல்லது கமலின் சொந்தப்படங்கள் அனைத்துக்கும் என்றே கூறலாம் இசை இளையராஜாதான். அதில் மெஹா ஹிட் படங்களான அபூர்வ சகோதரர்கள் (அண்மையில் கூட கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது), ராஜபார்வை, மைக்கல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ், விருமாண்டி, வெற்றி விழா, எனப் பட்டியல் நீளும் இந்தப்படங்களில் ராஜபார்வை "அந்தி மழை பொழிகின்றது" என்ற பாடல் இளையராஜாவின் டாப் 10 பாடல்களில் ஒன்றாகும். மைமகாராஜனின் "சுந்தரி நீயும்" பாடலில் கமல் கொடுத்த ஏற்ற இறக்கங்கள் ஒரு தேர்ந்த பாடகரைப்போல் இருக்கும்.

இவர்கள் இருவரும் இணைந்த படங்களில் இசை வெற்றிக்கு காரணம் கமல் பிறவி இசைக்கலைஞனாகவும் இருப்பதுதான். கமலால் ஒரு கர்னாடக சங்கீத மேடைக்கச்சேரி பண்ணமுடியும் என அண்மையில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா சொல்லியிருந்தார். கமலால் படங்களுக்கு இசை அமைக்க முடியும் என இளையராஜாவே தன் இசை நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியிருந்தார். இதுவரை கமல் தொடாத துறை இசை அமைப்பும் ஸ்டண்டுமாகத்தான் இருக்கவேண்டும்.

டிஸ்கி : எனக்குத் தெரிந்த சிலவற்றைத்தான் நான் எழுதியிருக்கின்றேன் உங்கள் பின்னூட்டங்கள் மூலம் ஏனையவற்றைத் தெரியப்படுத்தவும். அத்துடன் இசைவல்லுனர்கள் இவர்களின் வெற்றிக்கு இசை எப்படி கை கொடுத்தது என இசை மொழியில் (ராகம், தாளம் ஞானத்தை வைத்து) எழுதுங்கள்.

தலைப்பில் கலைஞானியை முன்னர் குறிப்பிடக்காரணம் கமல் திரையுலகில் இளையராஜாவைவிட பல வருடங்களுக்கு முன்னர் இணைந்தவர். அத்துடன் இந்த இரண்டு பட்டங்களும் கலைஞரால் கொடுக்கப்பட்டவை.