Showing posts with label உலகநாயகன். Show all posts
Showing posts with label உலகநாயகன். Show all posts

"கலை" க்கு வயது ஐம்பது

கமல் கலைத்துறையில் கால் தடம் பதித்து ஐம்பது வருடங்கள் நிறைவடைந்தது. அவர் பணி மேலும் மேலும் வளர வாழத்துகிறோம். மேலும் செய்திகளுக்கு
http://in.movies.yahoo.com/news-detail/61278/Kamal-Haasan-50-years-of-Indian-Cinema.html

2008 அதிகம் தேடப்பட்ட "தசாவதாரம்"

தசாவதாரம் அலை தமிழகத்தை மட்டுமே அடித்தது என்று நினைத்தால் அது இந்தியாவையே ஆட்டிப்பார்த்திருக்கிறது.
கூகுள் இந்தியாவில் 2008ல் அதிகம் தேடப்பட்டவைகளில் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் படங்களின் வரிசையில் தேடப்பட்டவைகளில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது தசாவதாரம். இந்தியா முழுதும் தமிழகத்தை திரும்பிப்பார்க்கச் செய்திருக்கின்றது தசாவதாரம் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. முதல் பத்து இடங்களை பிடித்ததில் தசாவதாரம் மட்டுமே தமிழ் படம் மற்ற அனைத்தும் ஹிந்திப்படங்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஹிந்தி பேசும் தொகையை கணக்கில் எடுக்கும் போது தமிழ் படம் ஒன்று இந்த அளவுக்கு முன்னிலையில் தேடப்பட்டுள்ளது சாதாரணமான விடயம் இல்லை. அதுவும் இரண்டாவது நிலையில்.

Most Popular Movies

1. Jodha Akbar
2. Dasavatharam
3. Singh Is King
4. Jaane Tu Ya Jaane Na
5. Jannat
6. Tashan
7. Ganesha
8. Fashion
9. Rock On
10. Race

# Bollywood is the king in India! It’s interesting to see that audience interest is going beyond song and dance sequences.

# Noteworthy is the # 2 slot retained by Tamil cinema.

Source: http://www.google.co.in/press/pressrel/20081210_zeitgeist2008.html

இதற்கு மேலும் ஏதாவது ஆதாரம் வேண்டுமா நம் தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் முன்னேறிக் கொண்டிருப்பதை நிரூபிக்க?

-ஸ்ரீ.

அபூர்வ சகோதரர்கள் படத்துக்காக முதலில் எடுத்த பாடல்

கடந்த வார இறுதி கலைஞர் தொலைக்காட்சியில் திரையிடப்பட்ட "அபூர்வ சகோதரர்கள்" வழக்கம் போல் என்னுள் நிறைய கடந்த கால நினைவுகளை எழுப்பிவிட்ட‌து. வெளி வந்த நேரம் எனக்கு 5 வயது. சென்னை கோடம்பாக்கம் பாட்டி வீட்டில் கேசட்டை கஷ்டப்பட்டு வாங்கி வந்து 3 நாட்கள் திரும்பத்தராமல் சுமார் 15 முறை பார்த்திருப்பேன். (புது படங்களை அப்போது அரை நாள் தான் வாடகைக்கு தருவார்கள்). அந்த படத்தில் எல்லா காட்சிகளையும் அட்டகாசமாக எடுத்திருப்பார்கள். பேசத்துவங்கினால் பக்கம் பக்கமாக பேசலாம் அபூர்வ சகோதரர்கள் பற்றி. இந்த ப‌டம் முதலில் துவங்கிய சில நாட்களிலேயே டிரிக் ஷாட்கள் எடுக்க வேறு சில உக்திகள் யோசிக்க ஆரம்பித்ததால் படத்தை நடுவில் நிறுத்திய விடயம் தெரிந்ததே. அப்போது எடுத்த ஒரு பாடல் காட்சி உங்களுக்காக. உங்களில் பலர் இதைப் பார்த்திருக்கக்கூடும். இது தான் பின்பு "ராஜா கைய வைச்சா" என்ற பாடல் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். (ஆனால் அவர் புலி வேடத்தில் ஆடியதால் இந்த பாடல் இலங்கையில் திரையிடப்படவில்லை என்ற தகவலும் கேள்விப்பட்டேன்)




கொசுறாக எல்லோருக்கும் பிடித்தமான காட்சி.



நிறைய நுணுக்கமான விஷயங்கள் செய்திருக்கிறார் கமல்ஹாசன் இந்த படத்திற்காக. மற்ற படங்களை விட இதில் அவர் கால் ஒல்லியாக இருக்கும். மடித்துக்கட்ட வசதியாக எடை குறைந்திருக்கிறார். குள்ள கமல் வேடத்தில் கால்சட்டையை மேலே உயர்த்தி பாதி வயிற்றில் போட்டிருப்பார். பற்களையும் சின்னதாக காட்டி இருப்பார்கள் அந்த வேடத்தில். அலசி எழுத நிறைய விடயங்கள் இருந்தாலும் நேரமின்மையால் முடிக்கிறேன். சகாக்கள் கொஞ்சம் எழுதலாமே இந்த படத்தை பற்றி.

குரு படம் வெளியான நேரம் குதிரை ஒன்று வேண்டும் என அடம்பிடித்தவன் இந்த படம் வந்த காலத்தில் காக்கட்டூ வேண்டும் என அழுதது நினைவிருக்கிறது. இப்போது வாங்கும் வசதி இருந்தும் நேரமில்லாத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஆசைகள் பட்டியலில் அது இருக்கின்றது. (சென்னை மக்கள்ஸ் "கடல்குதிரைகள்" கிடைக்குமிடம் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்....)

எத்தனை பேர் கமல் படம் பாக்குறீங்க?

படங்களை படங்களாக பார்க்க வேண்டும் என்பது என் கருத்தாக இருந்தாலும் கமல் படங்களின் வெளியீடுகளில் மட்டும் ஒரு சராசரி ரசிகனாக மாறிவிடுவேன். அது முதல் நாள் காட்சி முடிவடையும் வரை தான். அடுத்த நான் நானும் பூதக்கண்ணாடி மாட்டிக்கொண்டு குறை இருக்குதான்னு பாக்க கிளம்பிடுவேன். என்ன தான் நம்ம பையன் தப்பு பண்ணாலும் வலிக்காம ஒரு அடி வைப்போம் இல்லை அந்த மாதிரி கண்டிப்பா எனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு தெளிவா சொல்லிடுவேன். ஆனால் கமல் என்கிற அந்த நடிகனின் படத்தில் குறைகள் இல்லை என்பதை விட குறைகள் குறைவு என்று சொன்னால் சரியாக இருக்கும். சாதாரணமாக கமலின் படங்களை மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும். கதைக்கும் அந்த காட்சிக்கும் சம்பந்தம் இருப்பது போலவே தெரியாமல் இருக்கும் பல காட்சிகள் இருக்கின்றன. நான் கவனித்த அப்படி சில காட்சிகளை கீழே சொல்லி இருக்கேன். நீங்களும் கவனிச்சிருக்கீங்களா?

* இந்தியனில் மனீஷாவிடம் தன் மகன் முத்தம் தரும்போது மீசை குத்தியதாக சொன்னதால் மீசையை எடுத்ததாய் சொல்வார். அவனை கொன்ற பிறகு போலீசுக்கு தொலைபேசுவார் அப்போது மீசை இருப்பதாக இருக்கும். இது சாதாரண மாறுவேடமாக நினைக்காமல் கொஞ்சம் உள் இறங்கிப்பாருங்கள் அதன் அர்த்தம் புரியும்.

* ஹே ராமில் வசுந்தராவை பெண் பார்க்கப்போகும் போது கோயில் யானை தன் பாகனோடு இருப்பதாக ஒரு காட்சி கமல் கொஞ்சம் பின்னோக்கி தன் வாழ்க்கையை சிந்திக்கும் போது கல்கத்தாவின் கலவரத்தில் தன் பாகனை இழந்த யானையை காண்பிப்பார். அந்த யானை தான் கமல். அப்போது ராணி முக்கர்ஜியின் மரணம் அதையடுத்து நடந்த நிகழ்வுகளை சூட்சுமமாக அந்த ஒரு காட்சியில் பொறுத்தி இருப்பார்.

அந்த யானை பாகன் இறந்த பிறகு அவன் கையில் இருக்கும் அந்த அங்குசம் அதன் காலில் பட்டிருக்கும் அதனால் அது நகராமல் அந்த கலவரத்திலும் அமைதியாக இருக்கும். அந்த அங்குசம் தன் மனைவியின் நினைவு?? அல்லது மிருகத்துக்கு இருக்கும் அறிவு கூட மனிதர்களுக்கு இல்லையே என்பது பொருளா? கமலுக்கே வெளிச்சம்.

பின்னர் அதே படத்தில் "I do not" என்கிற வசனம் ஓரிரு முறை இடம் பெற்றிருக்கும் "I don't" க்கு பதிலாக. சுதந்திரத்துக்குப்பின் தான் "I don't" அதிகமாக புழக்கத்தில் வந்ததென கேள்விப்பட்டேன்.

இதற்கு பெயர் தான் டைரக்ஷன். அவர் பேட்டியில் கூட தான் இன்னும் முழுமையான‌ ஒரு டைரக்டர் ஆகவில்லை என்று தான் சொல்லி வருகிறார். அவர் நடிக்க ஆரம்பித்து டைரக்ட் செய்ய எத்தனை வருடங்களை ஆனது என இப்போது வரும் புது டைரக்டராக மாறிய நடிகர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.

* ஹே ராமில் இன்னொரு காட்சி. கமல்ஹாசனுக்கு காந்தியை அடுத்து வரும் வாரங்களில் கொலை செய்யச் சொல்லி ஒரு தந்தி வரும். மார்கழி நாளில் திருப்பாவை பாடிக்கொண்டே சிலர் தெருவில் நடந்து போவார்கள். இது டிசம்பர் நடுவில் துவங்கி ஜனவரி பாதி மாதம் வரை போகும். காந்தி சுடப்பட்டது ஜனவரி 30. பிழைகள் இல்லாமல். மன்னிக்கணும். பிழைகள் தவறான வாத்தை. பிசுறு இல்லாமல் படத்தை எடுக்க அவரிடம் பாடம் படித்தே தான் ஆக வேண்டும். கொடிகள் தூக்கிக்கொண்டு சிலர் வரலாம். இது வரலாற்றுப்படம் கதை, கதைக்களம் இதில் சின்ன தவறுக்கூட இடம் கொடுக்காமல் தான் எடுக்க வேண்டும். எடுத்தார். மற்ற கமெர்ஷியல் படத்தில் லாஜிக் இல்லாமல் போனாலும் பாதகம் இல்லை.

* கதாப்பாத்திரங்களுக்கு பெயரிடுவதிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்:

1. மகாநதி படத்தில் ‍ கிருஷ்ணசாமி, நர்மதா, கோதாவரி, யமுனா, காவேரி, பரணி, பஞ்சாபகேசன்.

2. அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லன்களுக்கு அவர்கள் குணாதீசியத்தோடு ஒட்டாத பெயர்கள்.

‍# தர்மராஜ் - ஒரு சின்ன புத்தி அரசியல்வாதி.

# சத்தியமூர்த்தி - பொய் மட்டுமே பேசத்தெரிந்த வக்கீல்.

# நல்லசிவம் - கொலையாளி.

# அன்பரசு - பணக்கார தப்பான காரியங்கள் மட்டுமே செய்யும் ஒரு கதாப்பாத்திரம்.

3. உன்னால் முடியும் தம்பியில் சீதா கதாப்பாத்திரத்தின் பெயர் லலிதா. "இதழில் கதை எழுது நேரமிது" பாடலும் லலிதா ராகம்.

4. இந்தியனிலும் (சுபாஷ்) சந்திரபோஸ், கஸ்தூரி (பா காந்தி) போன்ற பெயர்கள் கொடுக்கப்பட்டது கதாப்பாத்திரங்களுக்கு. சேனாபதி என்ற ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்ன செய்திருப்பாரோ அது அங்கு காட்டப்பட்டது. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றாலும் நாம் கவனிக்க வேண்டியது அவரது பர்ஃபெக்ஷன்.


* இந்தியனில் டிராபிக் இன்ஸ்பெக்டரை அடிகும் காட்சியில் அவரை கமல் "சார்ஜென்ட்" அப்படின்னு கூப்பிடுவார். மீண்டும் ஒரு நுணுக்கமான காட்சியமைப்பு.

* வேடிக்கையாக அமைக்கப்பட்ட அதிகம் கவனிக்கப்படாத ஒரு காட்சி பஞ்சதந்திரத்தில். 36 24 36 பாடலில் "இந்தியன் யாரென்று புரியவைப்பேன்" இந்த வரிகளின் காட்சியமைப்பு அவர் அமெரிக்க நகர வீதியில் வாய் கொப்பளித்து துப்புவார். நாம் செய்யறது தானே திருந்துறோமா? திருந்த கூட வேணாம் அது தப்புன்னாவது தோணி இருக்கா?

* விருமாண்டி உண்மை கதையில் பேச்சியம்மாவை பேய்காமனிடடிருந்து காப்பாற்றுவார். அதன் பிறகு விருமாண்டி மாட்டிரைச்சி கேட்க ஆரம்பிப்பார். அதன் பின்னர் அவர் தந்திரமாக கிணற்றுக்குள் மூடப்பட்டு "ஆடி வெள்ளி" வெளிவந்து தன் படையலை எடுத்து கொள்வது போல கதை நகரும். (விருமாண்டி படத்தில் ஒரு வில்லுப்பாட்டு பெரியகருப்பத்தேவரும், இசை ஞானியும் பாடிய ஒன்று அதை கேட்டால் தெளிவாக புரியும்).

அதே போல சின்னக்கோளாறுபட்டி ஆட்கள் நல்லமநாயக்கர் ஊராரை கொலை செய்த பின் அந்த பெண்ணை கிணற்றுக்குள் வைத்து காப்பாற்றுவார் கமல்.

பின் நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்லி தப்பிக்கும் காட்சியில் அந்த மூளை பிசங்கிய பெண் "அடப்பாவி கெணத்துக்குள்ள இருந்தப்ப நல்லவனா இருந்தியேடா. இப்போ இப்படி மாறிட்டியே" என சொல்லி அழும் ஒரு காட்சி உண்டு. இதற்கு டைரக்டோரியல் டச்னு ஒரே வார்த்தையில் புகழ்ந்தா போதுமா? தெரியலை.

*

இப்போ சொல்லுங்க எத்தனை பேர் கமல் படத்த பாக்குறீங்க?

கமல் படத்தை பாக்குறீங்களா இல்லை அது திரையிடப்படும் திரையரங்கில் இருக்கீங்களா?

தொடரும்... (என்னடா தொடரும்னு சொல்றான்னு பாக்காதீங்க. கமல் படங்களை கவனமாக பார்த்தால் நிறைய அழகான அம்சங்களை நான் தவறவிட்டது தெரியும். அவர் படங்கள் வரும் வரையில் இது போல சின்ன சின்ன நுணுக்கங்களை பார்க்கலாம். ஆமாம் நீங்கள் மேலே சொன்னவைகளை கவனித்திருக்கீங்களா? நான் ஏதாவது தவற விட்டுட்டேனா? உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் பின்னூட்டுங்கள். இவை அனைத்தும் நானே சிந்தித்தவைகள் இல்லை. அவ்வளவு சாமர்த்தியமும் இல்லை எனக்கு. சகரசிகர்கள் உடனான பேச்சுக்களின் போது சேகரித்த தகவல்கள்.)

-ஸ்ரீ.

சகலகலாவல்லவன் தான்

கமல்ஹாசன் என்ன உலகநாயகனா? ஆமாம் கிளிக்கி பாருங்கள்