தசாவதாரமும் ‍ தரம் தாழ்ந்த விமர்சனங்களும்

அப்படி என்னதான் கமல் மீதும், அவரது படங்களின் மீதும் கோபமோ? தங்களின் இஷ்டத்திற்க்கு வசைபாடுகின்றார்கள். இதை ஏன் செய்யவில்லை, அதை ஏன் செய்தார், அது எப்படி அப்படி வரலாம், இது ஏன் இப்படி வரவில்லை, இதுவா உலகத்தரம்...

1. முதல் கேள்வி தமிழே தெரியாத ஜாக்கிஜானை ஏன் பாடல் வெளியிட்டு விழாவிற்க்கு அழைக்க வேண்டும்?

ஜாக்கிஜான் திரைப்ப‌ட‌த்துறையினைச் சார்ந்த‌வ‌ர்தானே, த‌னது துறையைச் சார்ந்த ஒருவ‌ரைத்தான் க‌ம‌ல் அழைத்துள்ளார். சினிமா என்ப‌து ஒரு தொழில் அதிலும் லாப‌ம் வேண்டும் இல்லை என்றால் அதனைச் சார்ந்துள்ள‌வர்க‌ள் உண‌விற்க்கு எங்கு போவது? உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌ ஒரு ந‌ப‌ரை அழைத்தால் த‌ன‌து ப‌ட‌த்திற்க்கு ஒரு உலக‌ளாவிய‌ முக‌வ‌ரி கிடைக்கும், அந்த‌ திரைப் ப‌ட‌த்தினை உலகம் முழுவது எடுத்துச் செல்ல‌ ஜாக்கிஜான் வழிவ‌குப்பார் என்ப‌த‌னால் அழைத்துதிருக்க‌லாம். ஒலிம்பிக் டார்ச்சை விளையாட்டு வீர‌ர்க‌ளின் கைக‌ளில் கொடுக்காம‌ல், ந‌டிகைக‌ளிட‌ம் கொடுத்து ஜொள்ளுவிடும் அர‌சிய‌வாதிக‌ளைப் ப‌ற்றி எழுதி இருந்தால் ந‌ன்றாக இருந்திருக்கும்.

2. ப‌த்து வேட‌ச் சாத‌னைக்காக‌ ம‌ட்டுமே இந்த‌ப் ப‌ட‌ம்/ ஏன் ப‌த்து வேட‌ங்க‌ளிலும் க‌ம‌ல் ம‌ட்டுமே ந‌டிக்க‌ வேண்டும்?

ச‌ரிதான் இது சாத‌னைக்காக‌வே எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ம் தான், ஏன் சாத‌னைக‌ள் முறிய‌டிக்க‌ப் ப‌ட‌க்கூடாதா? இதைவிட‌ ஒரு ந‌ல்ல‌ திரைக்கதை(முடிந்தால்?) அமைத்து அதில் பதினோறு வேடங்களில் விக்ர‌மோ, சூரியாவோ ந‌டித்தால் க‌ம‌ல் என்ன‌ த‌டுத்து விட‌வா போகிறார்? ப‌த்து வேட‌ங்க‌ளிலும் புக‌ழ் பெற்ற‌ ந‌டிக‌ர்க‌ளை ந‌டிக்க‌ வைத்திருந்தால் த‌யாரிப்பாள‌ர் பாடு பெரும்பாடாகியிருக்கும்.

3.ப‌ட‌ம் முழுவ‌து ஆங்கில‌ வாடை.

பின்ன‌ர் புஷ், பிள‌ச்ச‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் த‌மிழிலா பேச‌ முடியும்? அப்ப‌டி பேசி இருந்தால் க‌ம‌லுக்கு அறிவே இல்லை எப்ப‌டி ஆங்கில‌க்கார‌ர்க‌ள் த‌மிழில் பேச‌ முடியும் என‌க் கூறி ஒரு கூட்ட‌மே கிள‌ப்பி இருக்கும்.

4.ஒரு அன்பர் ப‌ர‌த், கோவை குணா போன்றவர்களை க‌ம‌லுட‌ன் ஒப்பிட்டு இருக்கிறார்.

ந‌ல்ல‌வேளை அந்த அன்பர் இன்னும் போக்கிரி ப‌ட‌ம் பார்க்க‌வில்லை என நினைக்கிறேன் இல்லையென்றால் அதில் சுற்றும் விழிச் சுட‌ரே பாட‌லுக்கு வ‌டிவேலு ஆடுவதைப் பார்த்து பேசாம‌ல் அவ‌ரையே க‌ஜினியில் ந‌டிக்க‌வைத்திருக்க‌லாம் என‌க் கூட‌ கூறி இருப்பார். ஒரு க‌தாப்பாத்திர‌த்தை ஏற்று ந‌டிக்கும் போது அதை போல‌வே தான் ந‌டிக்க‌ வேண்டும். நல்லவேளை க‌ம‌ல் தமிழ் தெரிந்த தெலுங்குக்கார‌ர் போல் மிமிக்கிரி செய்கிறார், விஞ்ஞானி போல் மிமிக்கி‌ரி செய்கிறார் என‌ குற்ற‌ம் சாட்டாம‌ல் விட்டன‌ரே அதுவ‌ரை ச‌ந்தோச‌ம்.

5. ப‌ட‌ம் முழுவ‌து ஒட்ட‌ப்ப‌ட்டிருக்கும் மேக்க‌ப்.

என‌க்கு தெரிந்த‌ ப‌ல‌ உல‌க‌த்த‌ர‌மான‌ ஆங்கில‌ ம‌ற்றும் ப‌ல‌ மொழிப்ப‌ட‌ங்க‌ளிலும் மேக்க‌ப் பூச‌ப்ப‌ட்ட‌து ந‌ன்றாகத் தெரிய‌த்தான் செய்கிற‌து. ப‌ட‌ங்க‌ளில் ய‌தார்த‌ம் என்ப‌து ஒரு அள‌விற்க்குத் தான் இருக்கும். அதையும் தாண்டி அது ர‌சிக்கும்ப‌டியாக‌ இருக்கிற‌தா என்ப‌து தான் கேள்வி. அதில் நிச்ச‌ய‌ம் த‌சாவ‌தார‌ம் வெற்றி பொற்ற‌தாகும்.

6.ஜ‌ப்பானிய‌ ர‌சிக‌ர்களைக் க‌வ‌ர‌ க‌ம‌ல் முய‌ற்சிக்கிறார்?

இந்த‌ மாதிரி ஒரு ஐடியா க‌ம‌லுக்கு முன்னமே தெரிந்திருந்தால் இன்னும் ப‌ல‌ நாட்ட‌வரைக் க‌வ‌ர‌ ஒரு இருப‌து பாத்திர‌ங்க‌ளை உருவாக்கி அதிலும் ந‌டித்திருப்பார். ந‌ல்ல‌வேளை அமெரிக்க‌ அர‌சிய‌லில் க‌ம‌ல் அடியெடுத்து வைக்கும் முய‌ற்சி தான் புஷ் வேட‌ம் என‌ காம‌டி ப‌ண்ணாம‌ல் விட்ட‌ன‌ரே.

க‌டைசியாக‌ க‌ம‌லுக்கு ஒரு வேண்டுகோள் இனிமேல் பெண்வேட‌மிட்டு ந‌டிக்காதீர், ஏனென்றால் அந்த‌ பெண் மார்பில் இருந்து ஏன் பால் வ‌ர‌வில்லை என‌க் கூட‌ கேள்வி வ‌ர‌லாம்

கொசுருச் செய்திக‌ள்:

1.த‌சாவ‌தார‌ம் அமெரிக்காவில் நாற்ப‌து பிரிண்டுக‌ளாக வெளியிட‌ப்ப‌ட்ட‌ முத‌ல் தென் இந்தியத் திரைப்ப‌டம்.
2. அமெரிக்காவில் த‌மிழில் ம‌ட்டும் 30 ந‌க‌ர‌ங்க‌ளில் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து.
3. திரையிட்ட‌ மூன்று வார‌ங்க‌ளுக்குள் நூறு கோடி மேல் வ‌சூல் கிடைக்கும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

தசாவதாரம் சார்ந்த மலிவு விளம்பரங்கள்

தசாவதாரம் ஒரு பார்ப்பனீய மலம், கமலின் பிராமணிய முகம், தசாவதாரம் கமலின் மாஸ்டர்பேஷன் போன்ற தசாவதாரம் சம்மந்தமான எதிர்மறை விமர்சனங்களை படித்து ரசித்து இருக்கிறேன். ஏனென்றால் இவர்கள் விவாதம் செய்யும் நோக்கோடு எழுதுபவர்கள். தாங்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமான வாதங்களை இவர்கள் முன் வைக்கிறார்கள். இது போன்ற கூர்மையான ஆரோக்கியமான விமர்சனங்கள் தான் கமல் போன்ற கலைஞனை மெருகேற்றி வருகின்றன. இதே மாதிரி கமல் தசாவதாரத்தில் பெரும்பாண்மை மதத்தை கிண்டல் பண்ணுகிறார் ஆனால் சிறுபாண்மை மதங்களை ஆதரிக்கிறார் என்று மற்றொரு தரப்பு சொல்கிறது. இது போன்றவர்களுக்கு ஒவ்வொரு கமல் ரசிகனும் பதில் சொல்லியே ஆக வேண்டும்

இன்னொரு வகை விமர்சகர்கள் என்னை போன்றவர்கள். எதனால் தங்களுக்கு தசாவதாரம் பிடித்து இருக்கிறது என்று அதற்கான வாதங்களை முன் வைத்து எழுதுகிறோம். ஆனால் இப்படி எந்த வாதத்தையும் முன் வைக்காமல் தசாவதாரம் ஒரு குப்பை என்று போகிற போக்கில் ஒரு மூத்த வலைப்பதிவர் எழுதி இருக்கிறார். அவருடைய வாதத்தையும் அவர் பாணியில் மொக்கை என்று கூறி ஒதுக்கிவிட முடியும் ஆனால் அப்படி செய்து அவருகும் நமக்கும் வித்தியாசம் இல்லை என்று காட்ட விரும்பவில்லை. அவர் படம் பற்றி பெரிதாக எதுவும் குறை கூறாததால் எனக்கும் அதற்கான பதில்கள் இல்லை. ஆனால் அவர் பதிவு மற்றும் பின்னூட்டங்களை பார்க்கும் போது அவருடைய பதிவு மலிவு விளம்பரம் தேடும் ஒரு யுக்தி என்று மட்டும் புரிகிறது

அவருடைய முதல் பின்னூட்டத்திலேயே தசாவதாரம் அடிபொடிகள் வந்து தன்னை கும்முவார்கள் என்று எதிர்பார்த்து காத்து கிடப்பதாக சொல்லி இருக்கிறார். இதிலி இருந்தே தெரிகிறது அவருடைய மனோபாவம். அடுத்து சொல்கிறார் யாரும் சுப்பிரமணியபுரம் பற்றி பேசவில்லை அப்பவும் தசாவதாரம் தான் பெருசாக தெரிகிறது என்று. சுப்பிரமணியபுரம் பற்றி பின்னூட்டம் வர வேண்டுமானால் அதை பற்றி மட்டும் எழுதி இருக்கலாம் ஆனால் மலிவு விளம்பரம் வேண்டி தானே தசாவதாரத்தையும் தன் பதிவில் இணைத்தார்

சந்திரமுகி அந்நியன் போன்ற படங்கள் உளவியல் சம்மந்தமான கருவை கொண்டு வெளிவந்த படங்கள் அதனால் அவை இரண்டையும் கம்பேர் பண்ணி எழுதலாம் ஆனால் இவர் சுப்பிரமணியபுரம் படத்தையும் தசாவதாரத்தையும் கம்பேர் பண்ணியதில் எந்த விவாத நோக்கமும் தெரியவில்லை. ஆனால் அவருடைய நோக்கம் மட்டும் நிறைவேறி இருக்கிறது

தீர்க்கதரிசி கமல்

பின்னால் நடை பெறப்போகும் பல விஷயங்களை கணிப்பதில் அவர் ஒரு திறமைசாலி

1) 16 வயதினிலே படப்பிடிப்பில் ரஜினியை உதவி இயக்குனர்கள் மதிக்காத போது அவர்களிடம் கமல் சொன்னது " இவர்கிட்ட கால்ஷீட் கேட்டு நீங்கள் அலையிற காலம் வரும்"

2) சிங்கார வேலன் படப்பிடிப்பில் வடிவேலை கவனித்து தேவர் மகனில் வலுவான வேடம் கொடுத்தது

3) முள்ளும் மலரும் பட செந்தாழம் பூவில் பாடலைக்கேட்டு அதை படமெடுக்க முடியாத பணத்தட்டுப்பாட்டை அறிந்து இது கண்டிப்பாக படத்தில் இருக்க வேண்டும் என்று அதற்கு தேவையான வசதி செய்து தந்தது

4) மஹாநதி - சீட்டு கம்பெனி

5) மக்கள் தியெட்டருக்கு வரவேண்டுமென்றால் வசதி செய்ய வேண்டும் என்று அபிராமி தியேட்டருக்கு 95 ல் டால்பி சிஸ்டம் கொண்டு வந்தது. அதன்பின் தான் பல திரையரங்குகள் வசதிகளை மேம்படுத்தின

6) ஆளவந்தான் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட சொன்னது (அப்போது அவர் அளித்த பேட்டியில் திருட்டு வி சி டி தவிர்க்கவும், மக்கள் எளிதில் திரையரங்கை அடையவும் இது உதவும் என்றார். அப்பட தோல்வியால் இது எடுபடவில்லை. ஆனால் இப்பொது இதுதான் ட்ரெண்ட்). ஓடும் நாள் முக்கியமில்லை வசூல் தான் முக்கியம் என்று அன்று சன் டிவி பேட்டியில் (2001) சொன்னது இப்பொழுது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது

7) சமீபத்தில் அவர் சத்யம் சினிமாஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கூட இதைப் பற்றி சொல்லிஉள்ளார். (வாழைப்பழம் எல்லா இடத்திலயும் கிடைக்கிற மாதிரி நம்ம படம் கிடைக்கணும். இட்லி வாங்க, பான் போட வெளிய வர்ற ஆளு நம்ம படத்த தவற விடக்கூடாது.)

8) ஒரு நடிகன் தன் உடல், முக அமைப்பை மாற்றுவதன் மூலம் கதாசிரியனுக்கு சுதந்திரம் கொடுக்கிறான் என்ற அவர் கருத்தாலேயெ இப்போது விக்ரம், சூர்யா வால் நல்ல கதை அம்ச படங்களை கொடுக்க முடிகிறது

9) சத்யராஜ் - கடமை கண்னியம் கட்டுப்பாடு
நாசர் - மகளிர் மட்டும்
மாதவன் - நள தமயந்தி
பசுபதி - மும்பை எக்ஸ்பிரஸ்
என தன் தயாரிப்புகளின் மூலம் இவர்களின் பழைய முகத்தை மாற்றியவர் நம்மவரே

10) கிரேசி மோஹன் அவர்களின் ஒரு நாடகத்தைப் பார்த்தே அபூர்வ சகோதரர்களில் வசனகர்த்தா வாய்ப்பை வழங்கியது

சாதித்த தசாவதாரம் - ‍ நக்கீரன்

கமல், கே.எஸ்.ரவிகுமார், ஆஸ்கார் ரவிச்சந்திரன் இந்த மூன்று தமிழர்களின் கூட்டணியில் மிகப்பிரமாண்டமாக உருவெடுத்திருக்கிறது தசாவதாரம். இந்தப்படத்தில் கமல் மாறுபட்ட பத்து கெட்டப்புகளில் தோன்றி திரை ரசிகர்களை உள்ளபடியே திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார். கிராபிக்ஸ்சின் தோழமையோடு இந்தப்படத்தில் அவர் கையாண்டிருக்கும் டெக்னிக்கல் உத்திகளும் காட்சியமைப்புகளும் கோலிவுட் தரப்பையே உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தனது படங்களில் அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கும் கமல் சில படங்களில் கமர்ஷியல் ரீதியான வெற்றிக்கோட்டைத் தொடமுடியாமல் போனதும் உண்டு.

தமிழர்களின் இந்தக் கடுமையான தசாவதார உழைப்பிற்க்கு உரிய வெற்றி கிடைத்துக்கொண்டிருக்கிறதா? வசூல் எப்படி? என்பதை அறிய களம் இறங்கினோம்.

முதலில் தசாவதாரத்தை உருவாக்க கோடிக்கணக்கில் கரன்ஸிகளை இறைத்திருகும் அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை சந்தித்தபோது உற்சாகமாகப் பேச ஆரம்பித்த அவர். " தமிழ் நாட்டில் மட்டும் தினசரி 1250 காட்சிகள் ஓடிக்கிட்டு இருக்கு, அதோட இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஸ்ரீ லங்கா, பிரான்ஸ், அமெரிக்கா, நார்வே இப்படிப் பல வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலுமா 1755 காட்சிகளும் ஓடிக்கிட்டு இருக்கு ஆக தினசரி 3000 காட்சிகள் உலகம் முழுக்க ஹவுஸ்புல்லாக ஓடுவதால் நாங்கள் வசூல் கடலில் திக்குமுக்காடிக்கிட்டு இருக்கோம், எங்களைப் பொறுத்தவரை கமல் சாதனை நாயகனாக மட்டுமல்ல வசூல் நாயகனாகவும் இருக்கிறார்" எனப் புல்லரித்தபடி பேசினார்.

இவர் சொல்வது சரிதானா? சென்னை சத்யம் தியேட்டர் மேலாளரான கண்ணையாவிடமே கேட்டோம் "ஆமாங்க எங்க தியேட்டரின் 40 வருட வரலாற்றில் 14 நாள்ல 90 லட்ச ரூபாய்க்கு மேல வசூல் செய்த வசூலான ஒரே படம் தசாவதாரம் மட்டும்தாங்க" என்கிறார் அவரும் உற்சாகமாக.

மாயாஜால் திரையரங்க மேலாளர் மீனாட்சி சுந்தரமோ, "ரஜனியின் சிவாஜி படம் 118 நாள் ஓடி ஒரு கோடியே 12 லட்சத்தை வசூலித்தது ஆனா தசாவதாரமோ 17 நாள்லேயே 92 லட்ச ரூபாயத் வசூலாக குவிச்சிருக்கு. வொர்க்கிங்ஸ் டேஸ்ல கூட கூட்டம் குறையல இது உலக சாதனைதான்" என அவரும் தன் பங்கிற்க்கு சிலாகித்தார்.

தசாவதார விநியோகஸ்தர்களில் ஒருவரான பாண்டிச்சேரி கண்ணனோ, "ரொம்ப காலமாக சினிமாமேல வெறுப்பில இருந்த வயதான பெண்களும் ஆச்சாரமான பெண்களும் இந்தப் படத்துக்கு வர்தறைப் பார்க்கமுடியுது. அதேபோல் பொதுவாக கமல் படத்துக்கு ரிபீட் ஆடியன்ஸ் வரமாட்டாங்க ஆனா இதுக்கு ரிபீட் ஆடியன்ஸ் வர்றதையும் காணமுடியுது. பகுத்தறிவு பேசும் கமல் இதில் ஆன்மிகமும் பேசியிருப்பதால்தான் பெண்கள் கூட்டம் அதிகமாக வருது" என தன் கணிப்பையும் அவர் சொல்ல

"சிவாஜி" படம் நஸ்டம் என்று கோர்ட்டுக்குப்போனவராச்சே நீங்க ரஜனி மீதான அந்தக் கோபத்தில்தான் இப்ப கமலைத் தூக்குறீங்களா? என அவரை நாம் கலாய்க்க "அப்படியில்லீங்க சிவாஜி பட விசயத்தில் நாங்க நஸ்டப்பட்டதும் உண்மை, இப்ப லாபம் பார்க்கிறது உண்மை" என்றார் சீரியசாகவே.

மற்ற மாநிலங்களின் பல்ஸ் ரேட்? கேரளா எந்தா பரயுன்னு? விநியோகஸ்தர் ஹென்றியைக் கேட்டோம் அவரோ, " நான் பரயுறதைவிட திருவனந்தபுரம் பத்மநாபா தியேட்டர் முதலாளி கிரிஷ் சந்திரன் கிட்ட பேசுங்க" என்று அவரைக் கைகாட்டினார். கிரிஷ் சந்திரனோ "இவிட மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட இப்படியொரு வல்லிய ஓபனிங் கண்டதில்லை. ஈ ஸ்டேட்ல 82 தியேட்டர்ல படம் ரிலீசாகிட்டிருக்கு. மேக்கொண்டு 27 தியேட்டர்காரங்க காத்திட்டிருக்காங்க. இந்த மழைக்காலத்திலும் கூட்டம் நிறைய வருது. மொத்தத்தில் சாரே படம் பிரமாதமாக்கும்" என்றார் பூரித்தபடி.

ஆந்திரா ஏமி செப்புதுன்னாதி? விநியோகஸ்தர் சோபாவிடம் நாம் மாட்லாடியபோது "எங்க சூப்பர் ஸ்ரார் சிரஞ்சீவியோட தாகூர் படத்தின் வசூல் 25 கோடி ரூபா. இந்த பிரேக்கை தசாவதாரம் உடைச்சிடும்போலிருக்கு. இதன் மெகா ஹிட்டைப்பார்த்து இங்க பல ஹிரோக்கள் தங்கள் பட ரீலீசை தள்ளிவைச்சிட்டாங்க. ஒரு சாதரண ரசிகையாக இருந்துசொல்றேன் பல்ராம் நாயுடு கேரக்டரை எங்க ஜனங்க ரொம்ப ரசிக்கிறாங்க. அந்த கிழவி கேரக்டரையும் பெண்கள் சிலாகிக்கிறாங்க. சுனாமி காட்சிகளின் அதிர்ச்சியூட்டும் பிரமாண்டம் கூட ரசிகர்களைப் பிரமிக்கவைக்குது ஒட்டுமொத்ததில் ஆந்திராவே கமலை ஆராதிக்குது" என்கிறார் உணர்ச்சிமயமாய்.

வாட்ஸ் அப் இன் அமெரிக்கா? விநியோகஸ்தர் ஜெயவேல் முருகனோ " யு.எஸ்.ஏவில் ஒரே நேரத்தில் 60 சிட்டிகளில் ரிலீசான படம் இதாத்தான் இருக்கும் இவ்வளவு பிரமாண்டமாக ஒரு தமிழ்ப்படமா என்று அமெரிக்காரர்களே வியக்கிறாங்க. கமலின் பத்து கெட்டப்பும் அவங்களைப் பிரமிக்க வைக்கிறது. அவங்க உணர்ச்சிவசப்பட்டு எங்க கைகளை குலுக்கிப்பாராட்டுகிறாங்க. கமலின் இந்த தசாவதார சூறாவளியில் அமிதாப்பின் சர்க்கார் ராஜ் படம்கூட ஆட்டம் கண்டிருக்கு. மொத்தத்தில் தசாவதாரம் எல்லா வகையிலும் பிரமிப்பு" என்றார் பலத்த சிரிப்போடு.

நார்த் இண்டியா கியா கேத்தா ஹே? இந்தி டப்பிங்கில் 400 காப்பிகள் ரெடியாவதில் தாமதம் ஏற்பட்டதால் பாலிவுட்காரர்களுக்கு இன்னும் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தசாவதாரத்திற்க்காய் தவமிருக்கிறார்கள்.

உலகநாயகனான கமல் இந்தப்படத்தின் மூலம் இன்றைய தேதிக்கு இவரே என்று சொல்லும் அளவிற்கு கலெக்சன் நாயகனாக பதினோராவது அவதாரம் எடுத்திருக்கிறார். மொத்தத்தில் தமிழர்களின் இந்தத் திரைக்கூட்டணி உலக அளவில் மெஹா வெற்றியை தொட்டுக்கொண்டிருப்பதற்காக நாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

இரா.த.சக்திவேல்
நக்கீரன் 09.07.2008

டிஸ்கி : சாதித்ததா தசாவதாரம் என்பதுதான் நக்கீரனின் தலைப்பு. அதனை சாதித்த தசாவதாரம் என சற்று மாற்றி அமைத்துள்ளேன். காரணம் தலைப்பு எதிர்மறையாக இருப்பதுபோல் தோன்றியது. உலகநாயகன் கமல் வசூல்ராஜாவாக இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

ஓஷோவை ஆமோதிக்கிறாரா கமல்?

தசாவதாரம் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். மனிதன் மாதிரி ஒரு முறை அசை போடலாம் மாடு மாதிரி பலமுறை அசை போட்டால் நன்றாக இருக்காது. அதனால் இத்துடன் தசாவதார பதிவுகளை நிறுத்தி கொள்ளப் போகிறேன்

தசாவதாரம் படத்தில் மண்ணின் மைந்தனாக வரும் வின்செண்ட் என்னும் புரட்சி பாத்திரம் ஆதிக்க சக்தி மணற் கொள்ளையனிடம் தர்க்கம் செய்யும் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. அப்போது இருவருக்கும் வாக்குவாதத்தின் போது மணற்கொள்ளையன் ஒத்த ஆளாக உலகை காப்பாற்ற நீ என்ன உலக நாயகனா என்று கேட்க அதற்கு அந்த புரட்சியாளன் ஆம் நான் உலக நாயகன் தான் ஏன் எல்லோருமே உலக நாயகன் தான். விந்துவில் உள்ள கோடிக்கணக்கான உயிரனுக்களில் ஒன்றில் இருந்த வந்த எல்லோருமே உலக நாயகன் தான் என்று பதில் அளிப்பார், இந்த புரட்சி பாத்திரத்துக்கு பன்றி அவதரத்தின் பெயரை வைத்தது அந்த பாத்திரத்தை களங்கப்படுத்துவதாக இருந்தாலும் இந்த உலக நாயகன் வசனத்தை சொல்ல வைத்ததன் மூலம் அந்த சறுக்கல் கொஞ்சம் சமன் செய்யப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்

நமக்கும் ஆண்மீகத்துக்கும் கொஞ்சம் தூரம் தான். அப்பழுக்கில்லாத ஆண்மீக குருக்கள் பற்றியே எனக்கு எதுவும் தெரியாது அப்படி இருக்க விவகாரமான ஓஷோவை எல்லாம் அவ்வளவாக தெரியாது. நெருங்கிய நண்பரான பிரபல வலைப்பதிவர் தன் கணினியில் ஓஷோவின் பேச்சுகளை வைத்து இருக்கிறார். இது மாதிரி ஒரு சில சந்தர்பங்களில் ஓஷோவை பற்றி அறிந்து கொள்ள நேர்ந்தது. அப்போது தான் இந்த முதல் விந்து மேட்டர் பற்றி ஓஷோ சொன்னதாக நியாபகம். தசாவதாரம் மூலம் பல தரப்பட்ட ரசனைகளை கொடுத்த கலைஞானி ஓஷோவையும் விட்டு வைக்கவில்லை. ஆண்மீக குருவாக கருதப்பட்ட அவரின் கருத்துகளை சொன்னதன் மூலம் நான் ஏற்கனவே சொன்ன இரண்டும் கெட்டான் விஷயமும் இங்கே பொருந்தி வருகிறது

ரஜினி ரசிகர்களை கவரும் கமலின் கனவு பலிக்குமா

ஆஹா இவன் திருந்தவே மாட்டானா என்று நினைக்கிறீர்களா. ஸ்டார் போஸ்டில் தான் கும்மி அடிக்க கூடாது நமக்கு வேறு வழியா இல்லை. அதான் அங்கே பம்மி இங்கே கும்மி. தசாவதாரம் படத்தில் ஜப்பானிய பாத்திரத்தை கமல் வேண்டுமென்றே திணித்து இருக்கிறார். அந்த பாத்திரமே தேவை இல்லாதது. ரஜினிக்கு ஜப்பானில் உள்ள ரசிகர்கள் தானாக சேர்ந்த கூட்டம் அந்த கூட்டத்தை கலைக்க கமல் இப்படி எல்லாம் மெனக்கெட்டு ஜப்பான் மொழி பேசி குங்ஃபூ பைட்டு எல்லாம் போட வேண்டி இருக்கிறது. இது யார் சொல்லியது என்று நான் சொல்ல தேவை இல்லை

தசாவதாரம் படத்தை ஒரு ப்ளாட் மாதிரி கையாண்டு இருக்கிறார் கமல். அந்த பிளாட்டில் உள்ள முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் போது ஒவ்வொரு பாத்திரமாக உள்ளே நுழைகிறார்கள். ஆனால் ஜப்பானிய பாத்திரம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஜப்பானிய பாத்திரம் கிளைமாக்ஸ் காட்சியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் சுனாமி வரும் போது மூன்று கமல்கள் மோதிக் கொள்வார்கள். சுனாமி தங்களை நோக்கி வரும் போது பிளட்சர் கமலும் விஞ்ஞானி கமலும் எதுவுமே புரியாமல் நிற்க ஜப்பானிய கமலோ சுனாமி இஸ் பேக் என்று சொல்லுவார். இந்த இடத்தில் தான் கமலுக்குள் இருக்கும் பெர்ஃப்க்ஷனிஸ்ட் வெளிப்படுகிறார்

சுனாமி பற்றிய அந்த வசனத்தை கமல் மற்ற ஒரு கமலை வைத்து சொல்லி இருக்கலாம் அல்லது ஜப்பானிய கமலே ஓ மை காட் திஸ் இஸ் சுனாமி என்று சொல்ல வைத்து இருக்கலாம். ஆனால் அவரோ சுனாமி இஸ் பேக் என்று சொல்கிறார் ஏனென்றால் ஜப்பானியகளுக்கு தான் சுனாமி நமக்கு எல்லாம் முன்பே அறிமுகம். பல ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டுள்ளதாம். சுனாமி என்ற பெயரே கூட ஜப்பானிய பெயர் தானாம். இப்போது சொல்லுங்கள் அந்த பாத்திரம் திணிக்கப்பட்டதா என்று

தசாவதாரம் பதிவுகள் அவ்வளவு தானா என்று கேட்கிறீர்களா. நாளை வேறு ஒரு மேட்டருடன் சந்திப்போம்

கலைஞானியும் இசைஞானியும்

கலைஞானி கமலும் இசைஞானி இளையராஜாவும் தமிழ்சினிமாவின் இரண்டு மிகப்பெரிய சாதனையாளர்கள். இவர்களின் கொள்கைகள் வேறுபட்டாலும் இசை என்றபாலம் இவர்களை இன்றும் இணைத்தே வைத்திருக்கின்றது. கமல் 58ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த காலத்தில் பெரும்பாலும் கமலின் படங்களுக்கு இசைத் தாலாட்டுச் செய்தவர் இளையராஜா. அத்துட‌ன் க‌ம‌லைப் பெரும்பாலும் தான் இசை அமைத்த‌ ப‌ட‌ங்க‌ளில் பாட‌வும் செய்திருப்பார் இசைஞானி.

பதினாறு வயதினிலே பட்டிதொட்டி எங்கும் கமல்,ரஜனி, பாரதிராஜா, ஸ்ரீதேவி, இளையராஜா என பலரின் முகவரிகளை வெளிஉலகிற்க்கு எடுத்துச் சென்றபடம். அதன்பின்னர் பாரதிராஜா இளையராஜா கமல் கூட்டணியில் சிவப்புரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி, டிக்.டிக்.டிக், உல்லாச பறவைகள் என ஹிட் கொடுத்தார்கள் இருவரும். குறிப்பாக உல்லாசப் பறவைகளில் " நினைவே ஒரு பறவை" பாடலும் காட்சி அமைப்பும் அருமையாக இருக்கும். டிக்டிக்டிக் படத்தின் பின்னணி இசையில் ஞானி தன் கைவண்ணத்தைக் காட்டியிருப்பார். மீண்டும் பாரதிராஜா இளையராஜா கமல் கூட்டணியில் ஒரு படம் வெளிவராதா என ஏங்கிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

அடுத்தது கே.பாலசந்தர் இளையராஜா கமல் கூட்டணியில் புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி இர‌ண்டும் இசையை மைய‌மாக‌ வைத்து எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ள் புன்ன‌கை ம‌ன்ன‌னில் மேல்நாட்டு இசையும், உன்னால் முடியும் த‌ம்பியில் க‌ர்னாட‌க‌ இசையும் கலந்து ஞானி க‌ல‌க்கியிருப்பார். இதில் புன்ன‌கைம‌ன்ன‌னில் முத‌ல் முத‌லில் க‌ம்யூட்டர்மூலம் இசையை அறிமுக‌ப்ப‌டித்தியிருப்பார். புன்ன‌கை ம‌ன்ன‌ன் பின்ன‌ணி இசை ம‌ற்றும் அத‌ன் தீம் மியூசிக் இசைஞானியின் பேரைச் சொல்லும் இசைக்குறிப்புக‌ள்(கானாப் பிர‌பா ஒருமுறை இத‌ன் இசை வ‌டிவ‌ங்க‌ளை த‌ன் வ‌லையில் ப‌திவு செய்திருன்தார்).

அடுத்து பாலுமகேந்திரா கமல் கூட்டணியில் மூன்றாம் பிறை கமலுக்கு இரண்டாம் தடவை தேசியவிருது வாங்கித்தந்த படம்(முதல் படம் களத்தூர் கண்ணம்மா சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கு தேசியவிருது). இதில் இடம் பெற்ற "கண்ணே கலைமானே" பாடல் கவிஅரசர் கண்ணதாசனின் இறுதிப்பாடலாகும், கேஜே ஜேசுதாசின் குரலும் கமல ஸ்ரீதேவியின் நடிப்பும் இசைஞானியின் தாலாட்டு இசையும் இந்தப்பாடலை எவர்கிரீன் பாடலாக இன்றைக்கும் நினைக்கவைக்கும். பின்னர் பாலுமகேந்திராவுடன் மீண்டும் கோகிலா, சதிலீலாவதி போன்ற படங்களில் கமல் இளையராஜா இசைக்கூட்டணி தொடர்ந்தது. சதிலீலாவதியில் மாறுகோ மாறுகோ பாடலை கலைஞானி கமலே பாடினார். இந்தப்பாடலில் பல சினிமாப்படங்களின் பெயர்களை இணைத்து கவிஞர் வாலி அழகாக எழுதியிருப்பார்.

எஸ்பிமுத்துராமன் கமல் இளையராஜா கூட்டணியில் பல படங்கள் வெளிவந்தன. அனைத்துப்படங்களிலும் இசையும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

நாயகன் கமலை உலகநாயகனாக உயர்த்திய படம். இந்தப்படத்தின் "தென்பாண்டிச்சீமையிலே" என்றபாடலை கமல், இசைஞானி இருவரும் பாடியிருப்பார்கள். இதன் பின்னணி இசையிலும் ராஜா தன் கைவரிசையைக் காட்டியிருப்பார். நாயகனின் வெற்றிக்கு இளையராஜாவும் ஒரு காரணம் என்பதை மறக்கமுடியாது.

ராஜ்கமல் பிலிம்ஸ் அல்லது கமலின் சொந்தப்படங்கள் அனைத்துக்கும் என்றே கூறலாம் இசை இளையராஜாதான். அதில் மெஹா ஹிட் படங்களான அபூர்வ சகோதரர்கள் (அண்மையில் கூட கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது), ராஜபார்வை, மைக்கல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ், விருமாண்டி, வெற்றி விழா, எனப் பட்டியல் நீளும் இந்தப்படங்களில் ராஜபார்வை "அந்தி மழை பொழிகின்றது" என்ற பாடல் இளையராஜாவின் டாப் 10 பாடல்களில் ஒன்றாகும். மைமகாராஜனின் "சுந்தரி நீயும்" பாடலில் கமல் கொடுத்த ஏற்ற இறக்கங்கள் ஒரு தேர்ந்த பாடகரைப்போல் இருக்கும்.

இவர்கள் இருவரும் இணைந்த படங்களில் இசை வெற்றிக்கு காரணம் கமல் பிறவி இசைக்கலைஞனாகவும் இருப்பதுதான். கமலால் ஒரு கர்னாடக சங்கீத மேடைக்கச்சேரி பண்ணமுடியும் என அண்மையில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா சொல்லியிருந்தார். கமலால் படங்களுக்கு இசை அமைக்க முடியும் என இளையராஜாவே தன் இசை நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியிருந்தார். இதுவரை கமல் தொடாத துறை இசை அமைப்பும் ஸ்டண்டுமாகத்தான் இருக்கவேண்டும்.

டிஸ்கி : எனக்குத் தெரிந்த சிலவற்றைத்தான் நான் எழுதியிருக்கின்றேன் உங்கள் பின்னூட்டங்கள் மூலம் ஏனையவற்றைத் தெரியப்படுத்தவும். அத்துடன் இசைவல்லுனர்கள் இவர்களின் வெற்றிக்கு இசை எப்படி கை கொடுத்தது என இசை மொழியில் (ராகம், தாளம் ஞானத்தை வைத்து) எழுதுங்கள்.

தலைப்பில் கலைஞானியை முன்னர் குறிப்பிடக்காரணம் கமல் திரையுலகில் இளையராஜாவைவிட பல வருடங்களுக்கு முன்னர் இணைந்தவர். அத்துடன் இந்த இரண்டு பட்டங்களும் கலைஞரால் கொடுக்கப்பட்டவை.