"கமல் என் மகன்!" - பரமக்குடி சீனிவாசன்


சினிமாத்தன பரபரப்புக்கும் தனக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்பதை அடக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தது, அமைதியை அணிந்திருந்த அந்த வீடு.

"மகனுக்குத் தேசிய அவார்டு ("மூன்றாம் பிறை") கெடச்சிருக்கு ! ஆனா, உங்க முகத்துல அதுக்கான அடையாளத்தையே காணோமே!"

"சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக தலைகால் புரியாம ஆடச் சொல்றீங்களா?" - பளிச்சென்று கேட்கிறார் பரமக்குடி அட்வகேட் டி. சீனிவாசன்.

"உங்க மகன் இந்த அளவுக்கு சூப்பர்ஸ்டாரா வர்வார்னு ஆரம்ப காலத்துல நெனச்சீங்களா?"

"நிச்சயமா ! நேத்துகூட " Oh My Boy, You Deserve OSCAR "னுதான் அவனுக்குத் தந்தி அடிச்சேன்!"

"இந்தப் பெருமையில், கமலை வளர்த்து ஆளாக்கிய உங்கள் பங்கு பற்றி...."

"கமல்கிட்டே அளவுக்கதிகமான திறமை இருக்கு. முன்னுக்கு வந்துட்டான். அவ்வளவுதான். மத்தபடி, பெரிசா லொல்லிக்கொள்ற அளவுக்கு நான் ஒண்ணும் செஞ்சிடலை !"

"சரி, சிறுசா சொல்லிக்கொள்ற அளவுக்காவது இருந்திருக்கணும்லே.....?"

"சினிமாத்துறையிலே பெரிய கலைஞனாகப் பேர் எடுக்கணும்கறத்துக்காக அவனுக்கு எல்லாவிதமான பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்தேன். ஆரம்ப காலத்துல என்கிட்டே வந்து, "நீங்க சொன்ன மாதிரி வாய்ப்பு வரலையே"னு அடிக்கடி வருத்தப்படுவான். அப்போதெல்லாம் அவன் மனச்சோர்வுக்கு டானிக் கொடுத்து, உற்சாகம் ஊட்டுவேன். "நான் தேய்ந்து அழிவனேயன்றி, துருப்பிடித்து அழியமாட்டேன்" என்கிற வாசகத்தைத் திருப்பித் திருப்பி நினைவுப்படுத்துவேன். அவனோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கிட்டு, என்னைவிட அதிகமா அவனுக்கு ஆதரவு கொடுத்த என் மனைவிக்குத்தான் இந்த வெற்றியில் பெரும்பங்கு உண்டு. !"

"கமல் வளர்ச்சியில் உங்க மனைவிக்குப் பெரும்பங்கு உண்டுனு சொல்றீங்க! ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வர முடியுமா?"

"எங்க குடும்ப நண்பராக நெருங்கிப் போயிருந்த டி.கே. சண்முகத்தின் நாடகத்துல அவன் நடிச்சிட்டிருந்த நேரம்; ஹாஸ்பிடலில் ஆபத்தான் என் மனைவி என்னைக் கூப்பிட்டு, "நான் சாகறத்துக்கு முன்னால டி.கே.சண்முகத்திடம் கொஞ்சம் பேசணும்"னு கெஞ்சினா. ஒரு டாக்ஸியில் கொண்டுபோய் அவர் வீட்டில் விட்டேன்.

'அய்யா ! நாங்க பணக்காரங்கதான். ஆனாலும், உங்க நாடகக் குழுவுல இருக்கிற ஏழைகளோட ஒரு ஏழையா என் மகனையும் சேத்துக்குங்க ! நீங்க சரின்னு சொல்லிட்டா, நான் நிம்மதியா உயிர் விடுவேன்'னு சண்முகத்திடம் சொன்னாள் என் மனைவி.

உடனே அவர், 'கவலைப்படாதீங்கம்மா! உங்க பையன் இனி என் நாடகக் குழுவுல மட்டுமல்ல; என் குடும்பத்தியேயும் ஒருவன். என் பிள்ளைகளுக்கு என் சொத்துல எவ்வளவு கெடைக்குமோ அதே அளவு அவனுக்கும் உண்டு'ன்னு உருக்கமாகச் சொன்னார்."

" 'அவார்ட் கெடைச்சதுல கமல் அப்பாவை விட அதிகமா நான் சந்தோஷப்படறேன்'னு கே. பாலசந்தர் சொல்லியிருந்தாரே... படிச்சீங்களா?"

"படிச்சேன்! உடனே கே.பி-க்கு ஒரு லெட்டர் எழுதிப் போட்டேன். 'நீங்க சொல்லியிருப்பது உண்மைதான். என்னை விட நீங்க அதிகம் சந்தோஷப்படுவதுதான் எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது'ன்னு எழுதினேன்.

ஆரம்ப காலத்துல கே.பி.யின் நாடகத்துல அவனை நுழைக்கிறதுக்கு எவ்வளவோ ட்ரை பண்ணினோம். முடியாமல் போயிடுச்சு. ஜெமினிதான் அவரிடம் திருப்பித் திருப்பி பிரஸ் பண்ணி அரங்கேற்றத்துல சான்ஸ் வாங்கிக் கொடுத்தாரு.!"

தன் மகனின் இந்த வளர்ச்சியில், கே.பியின் ரோலைப் பற்றி குதூகலத்துடன் நிறையவே பேசுகிறார் டி.எஸ்.

"கமல் சின்ன வயசுல புத்திசாலித்தனமான குறும்புச் சேட்டைகள் அதிகம் பண்ணியிருப்பாரே?"

"ஆமாம், எங்க வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்களின் ஆக்டிவிட்டீஸை உன்னிப்பா கவனிப்பான். அவங்க போன பிறகு, அதே மாதிரி செய்து காட்டுவான். போரடிக்கிற நேரம், நானும் என் மனைவியும் அவனைப் படக்கத்தில் இருத்தி, 'மிமிக்ர்' செய்யச் சொல்லி ரசிப்போம்!

இங்குள்ள என் நண்பரின் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் ஊழியரிடம் போய், 'நான் எம்.ஜி.ஆராக்கும். என்னை உள்ளெ விடறியா? இல்லாட்டி டிஷூம்... டிஷூம்தான்' னு கையக் கால உதைப்பான்."

"நடிகைகளைக் கிண்டல் பண்ணுவதில் கில்லாடின்னு பேர் வாங்கியிருக்கிறாரே! உங்ககிட்டே அப்படி எப்போதாவது..."

"ஸ்டாரா ஆனதுக்கப்புறம் என்னை நேருக்கு நேர் சந்திக்கிறதைக் கூடிய மட்டும் அவாய்ட் பண்ணுவான்."

"உங்ககிட்டே... அவ்வளவு பயமா?"

"அப்படித்தான்னு நினைக்கிறேன்."

"கமல்கிட்டே உங்களுக்குப் பிடிச்ச அம்சம் எது?"

"சினி பீல்டுல நுழையறப்போ 'மது, புகையிலை, மாது.... இந்த மூணுக்கும் இடம் கொடுக்க மாட்டேன்' னு பிராமிஸ் பண்ணித் தரச்சொன்னேன். முதல் ரெண்டுக்குதான் சம்மதிச்சான். ஆனாலும், அன்னிக்குக் கொடுத்த வாக்குறுதியை இன்னும் காப்பாத்திட்டு வர்றதை நெனச்சு சந்தோஷப்படறேன்!"

"திறமையான கலைஞனை உருவாக்கியிருக்கிற இன்டெலக்சுவல் பாதர் என்ற முறையில் கேட்கிறேன். ஸைக்காலாஜிக்கலி, குழந்தைகளை எப்படி வளர்க்கணும்?"

"குழதை கருத்தரித்த நிலையிலேயே வளர்ப்புப் பணியை ஆரம்பிச்சிடணும்கிறதுதான் என் கருத்து. கர்ப்பமாயிருக்கின்ற தாயின் உள்ளுணர்வுகளைப் பொறுத்தே குழந்தைகளின் வளர்ச்சி அமைகிறது. குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் டேஸ்ட் என்ன என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து, இப்படித்தான் இவனை உருவாககவேண்டும் என்று திட்டமிட்டு நம்பிக்கையோடு வளர்த்தால், நாட்டில் ஜூனியஸ் பஞ்சத்தைப் போக்கிடலாம்."

வழக்கறிஞர் குழு ஒன்று ஆளுநர் குரானாவைச் சந்தித்தபோது, "ஐயம் சீனிவான் ! அட்வ்கேட் அட் பரமக்குடி"ன்னு சொன்னாராம் இவர். பக்கத்தில் இருந்தவர், 'கமல்ஹாசன் பாதர்' என்று கிசுகிசுத்தவுடன், கவர்னர் "ஓ..! யூ ஆர் கமல்ஸ் பாதர்?!" என்று உற்சாகத்தோடு கேட்டாராம். உடனே, "நோ ! மை சன் ஈஸ் கமல் !" என்று கூறி, அங்கு இருந்த எல்லோரையும் அசர வைத்திருக்கிறார் சீனிவாசன்.

"நீங்க கமல் அப்பா இல்லை; உங்க மகன்தான் கமல்னு இந்த இரண்டு மணி நேர உரையாடல் நிருபிச்சிட்டீங்க" என்று சொல்லி, விடைபெறுகிறோம். மழலையாய்ச் சிரித்து மகிச்சியுடன் அனுப்பி வைக்கிறார்.

நன்றி:
ஆனந்த விகடன், 12.11.08.

கமல் சொல்லும் வெற்றியின் ரகசியம்

கமல் தன் வெற்றியின் ரகசியம் என்ன என்று தன் பார்வையில் ஒரு பேட்டியில் முன்பு சொன்னது இது.

"உலகத்தைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ள முடியாத என்னுடைய குழந்தைப் பருவத்தில் ஏவி.எம். நிறுவனத்தினால், அதிர்ஷ்டவசமாகக் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகம் செய்யப்பட்டேன்.

என்னுடைய முதல் படம் வெளியானவுடன் மற்றவர்களுக்குக் கிடைக்கிற மரியாதை, புகழ் எல்லாவற்றையும்விட எனக்கு அதிகமாகவே கிடைக்க ஆரம்பித்தது.

குறிப்பாக என்னுடைய வயதுடையவர்கள் எல்லோரும் என்னை ஏதோ கடவுள் அவதாரமாக நினைத்துக்கொண்டு நேசிக்கத் தொடங்கினார்கள்.

மற்றவர்களின் பாராட்டுகளும், எனக்கு ஊக்கத்தைக் கொடுத்த அவர்கள் வார்த்தைகளுமே என்னை ஒரு நடிகனாகவே நான் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிற ஆசை விதைகளை, அன்று எனது இளம் நெஞ்சில் ஊன்றியது.

இன்று எல்லா மொழிகளிலும் நடித்து ஒரு பெரிய நடிகனாக நான் மாறி நிற்பதற்குக் காரணம், அன்று எனக்குள் எடுத்துக்கொண்ட சபதம்தான். `பெரிய நடிகனாக வேண்டும்' என்ற ஒரே லட்சியத்துடன் எனது ஒவ்வொரு பொழுதுகளும் புலர்ந்தன.

இவ்வளவு ஆண்டுகளை நான் சினிமா உலகிலேயே செலவழித்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது இதயம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் வழிந்தோடுகிறது.

என்னுடைய துரதிர்ஷ்டம் நான் யார் யாரை நண்பர்கள் என்று நினைத்துப் பழக ஆரம்பித்தேனோ அவர்கள் எல்லோரும் எனக்கு எதிரியாகவே மாறியது.

ஆனாலும் எந்த இடத்தை எட்டிப் பிடிக்க நினைத்தேனோ, அந்த இடத்தில் இன்று நான் இருக்கிறேன் என்பதுதான் சந்தோஷமான செய்தி.

திடீரென்று இன்று நான் மறைந்தாலும் `கமல்' எனும் ஒரு கலைஞன் திரைப்பட உலகில் வாழ்ந்தான் என்கிற பெயர் எனக்கிருக்கும்.

ஒரு நடிகனாக மட்டுமே என்னை நான் வளர்த்துக் கொள்ள நினைத்திருந்தால் எனது வரலாறும் எப்போதோ மறைக்கப்பட்டிருக்கும். ஆனால் உதவி இயக்குனராக, நடனப் பயிற்சியாளராக, கதை இலாகாவில் ஆலோசகராக இப்படி ஒரு திரைப்படத்திற்கான அத்தனை துறைகளிலும் என்னை நான் ஆழமாக வளர்த்துக் கொண்டேன்.

இதற்குக் காரணம் ஒரு துறையில் இல்லாவிட்டாலும், இன்னும் ஒரு துறையில் திரைப்பட உலகிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.

நான் செல்கின்ற ஒவ்வொரு இடத்திலேயும் போட்டியைச் சந்தித்திருக்கிறேன். இப்படிப்பட்ட போட்டிகள் என்னையும், என் திறமையையும் இன்றளவும் வளர்த்து வருகிறது.

வெளிப்படையாக சொல்லப் போனால் ஒரு "ராஜபார்வை''யில் நான் நடித்தது போலவோ, ஒரு "சலங்கை ஒலி''யில் நான் நடித்தது போலவோ, ஒரு "ஏக் துஜே கேலியே''வில் நான் நடித்தது போலவோ, ஒரு "அபூர்வ சகோதரர்களி''ல் அப்புவாக நடித்தது போலவோ, ஒரு "அவ்வை சண்முகி''யில் நடித்தது போலவோ, ஒரு "இந்தியனி''ல் நான் நடித்தது போலவோ வேறு யாராலும் நடிக்க முடியாது என்பது நான் ஏற்படுத்திய சாதனைதான்.

எந்த கேரக்டரிலும் கமலால் நடிக்க முடியும் என்று இன்று நான் பெயர் எடுத்திருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் எந்தவிதமான சிபாரிசும் இல்லாமல் என்னுடைய திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து நடித்திருக்கும் நடிப்புகள்தான்.

எனது வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் நான் கதைகளையும், அதில் வரும் கதாபாத்திரங்களையும் பற்றி நன்றாக அலசிப் பார்க்கத் தெரிந்தவன்.

பேனர் என்பதை எப்போதும் இரண்டாம் பட்சமாக மாற்றி கதை என்ன... கேரக்டர் என்ன... என்பதை மட்டுமே தெரிந்து கொள்வேன்.

அத்துடன் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்த நாளிலிருந்தே நான் கற்றுக்கொண்டு வந்தது, மற்றவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்யவேண்டும் என்பதைத்தான்.

செய்வதைத் திறமையுடன் செய்து வருவதால், இன்று எனக்கென்று ஒரு இமேஜூம், குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறார்கள்.

ஒரு துறையில் வெற்றியடைய வேண்டும் என்றால், நமது முழு கவனத்தையும் அதே துறையில் செலுத்தினால் போதும் என்பார்கள். நானும் அப்படித்தான். நான் ஏற்ற ஒவ்வொரு பாத்திரமும், பல நாட்கள் அந்த அந்தப் பாத்திரங்களுடன் நான் பழகி செய்தவைதான்.

எந்த எந்த கண்ணோட்டத்துடன் என்னைப் பார்க்க விரும்புகிறார்களோ, அந்தக் கண்ணோட்டத்தில் காட்சி தருவதையே நான் பெரிதும் விரும்பினேன்.

பெரும்பாலும் எனக்கு "டூப்" போட்டுக் கொள்வதை நான் வெறுக்கிறேன். ஒரு இளைஞனின் முழுத்திறமையும் வெளிப்பட வேண்டுமென்றால் ஒவ்வொரு கட்டத்திலும் அவனது திறமை பளிச்சிட வேண்டும் என்று நினைப்பவன் நான்.

என்னுடைய ஒன்றிரண்டு படங்கள் தோல்வியடைகிறது என்றால் ஒன்று முழு கவனத்தையும் அதில் நான் செலுத்தியிருக்க மாட்டேன், இல்லையென்றால் இயக்குனர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு செய்தவையாக இருக்கும்.

இவையெல்லாம் மீறி நான் வெற்றி பெற்று வருகிறேன் என்றால் அதற்குக் காரணம், மற்றவர்கள் போல் நான் மாறிவிடவேண்டும் என்ற எண்ணமல்ல. நான் நானாகவே இருந்து கொண்டு, எல்லாவற்றிலும் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணமும், எல்லா பாத்திரங்களுக்குள்ளும் நான் இருக்க வேண்டும் என்ற துடிப்புடன், நான் எடுத்துவரும் முயற்சிகளும்தான்.

இத்தனை ஆண்டு காலமும் நான் இந்தத் துறையில் இருந்து வருவதற்கு இவைகளே உதவியாக இருந்து வருகின்றன."

இது கமலுக்கும் சினிமாவும் மட்டும் தொடர்புடைய வெற்றி ரகசியம் இல்லை. ஒவ்வொருவருமே அவரவர் துறையில் இதுப்போல் இருந்தால், அனைவருக்குமே வாழ்க்கையில் வெற்றி நிச்சயமே!

இன்று பிறந்த நாள் காணும் உலகநாயகனுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Source : http://www.saravanakumaran.com/2008/11/blog-post_07.html

நவம்பர் 7 - மனிதநேயம் பிறந்தநாள்


உரிமைகள்
ம‌ரிக்கும்
தேசத்தில்
வன்முறை
இயல்பாகவே
பிறக்கிறது!

- டாக்டர் கமல்ஹாசன்!

கமல்ஹாசன் பிறந்தநாள் செய்தி

கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். (பெரிதாக பார்க்க படங்களின் மேல் சொடுக்கவும்)












நன்றி: http://sify.com